CJ

Please explain the good, bad and problems on the trick of body to body transformation!


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


பதில்:

இன்னமும் உங்களுக்கு இந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கும் ஆசை தீரவில்லை போலிருக்கிறதே? நல்லவேளையாக எப்படிச் செய்வது என்று என்னிடம் கேட்காமலிருப்பது குறித்து மகிழ்கிறேன். அடுத்த கேள்வி அதுவாகவே இருந்தாலும் இருக்கலாம்தானே? யார் கண்டது? இப்பொழுது இந்த கேள்விக்கு வரலாம், முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப நாட்களில், வேதாத்திரிய யோகத்தில் இணைவதற்கு முன்பாகவே கூட, சித்தர்களின்பால் நான் ஆர்வமோடு இருந்தேன். இதற்கு காரணமாக என்வீட்டில், பரணில் மூட்டைகட்டி வைத்திருந்த, என் தந்தைவழி தாத்தாவின் நூல்கள் உதவின. என்வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறை, ஏனோ எனக்கு யோகத்தின்மேல் ஏற்பட்டது. மேலும், நகரில் இருந்த நூலகமும், உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைத்த நூல்களும் உதவியது. ஒரு சிறிய கிழிந்த துண்டு காகிதத்தைக்கூட படிக்கக்கூடிய ஆரவம் மிகுந்த காலம் அது. அப்படியாக, பதினென்கீழ்கணக்கு சித்தர்கள் முதலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி என்று பலரையும் தெரிந்துகொள்ள நூல்கள் பல கிடைத்தன.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை குறித்தும் நான் அறிந்தேன். சித்தர் பெருமகான் திருமூலர், காட்டுவழியே செல்லும் பொழுது, மேய்ப்பனை இழந்த மாடுகள் வீடுதிரும்பாமல் இருந்தபொழுது, இறந்து போன அந்த மேய்ப்பனின் உடலில், தன்னுயிரைப் பாய்ச்சி, மேய்ப்பனாக மாறி, அம்மாடுகளை வீட்டிற்கு வழிநடத்தி உதவியதாக படித்திருக்கிறேன்.  சித்தர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காகவே இவ்வித்தையை செய்திருக்கிறார்கள். பேரதிசயமாக இருந்ததும் உண்மை. இது எப்படி என்பதுதான் அந்த 14 முதல் 17 வயதில் எனக்கு அறியமுடியவில்லை. 18 வயது நிறைவில்தான் ‘வேதாத்திரிய தீட்சை’ பெற்றேன். அந்த வயதிலே ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' மையமாகக் கொண்டு கதைகள் கூட எழுதினேன் என்றால் மிகையில்லை. ஏதேனும் சில நேரம், நானே வேறு யாராகவோ இருப்பதாகவும், என்முகத்தை நானே வேறு ஆளாக கண்ணாடியில் பார்ப்பது வரையிலான கனவுகள் கூட கண்டதுண்டு. ஆனால் அந்த கனவுகளின் உண்மை நான் மட்டுமே அறிவேன்.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில், இறந்த உடலில் புகுவது என்று சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உயிர் பிரிந்த உடலில் எல்லாமே இறந்து கொண்டே இருக்கையில், அதை மீண்டும் புதுப்பிப்பது இயற்கைக்கு முரணானது. (உடனே வாளை தூக்கி சண்டை போடவேண்டாம்). அப்படியானால், உயிரோடு இருக்கும் ஒரு மனிதனோடு கலக்கமுடியுமா? முடியும். அதிலும் சிக்கல் உள்ளது. அந்த உயிர் தனித்தன்மையாக இருந்தால், கூடுவிட்டு கூடுபாயும் நம்மை ஏற்றுக்கொள்ளாது. பிறருக்கும், சமூகத்திற்கும், உலகுக்கும் நன்மை தரதக்க வகையில் இதை செய்யலாம் என்பது ‘சித்தர்களின் கருத்து’. தனிமனித, சுயநல, பறித்தல் நோக்கோடு இதைச் செய்தால், உங்கள் உயிர் வீணாகிவிடும். கவனம்.

முக்கியமாக, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை செய்வதென்றால், நீங்கள் உங்கள் உயிரை தனியே பிரித்துப் பழகவேண்டும். உயிரில் குறிப்பிட்ட அளவு பிரிந்து சென்ற உங்கள் உடல், மிகச்சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சியும் இங்கே நேரக்கூடாது. கிட்டதட்ட நீங்கள் இறந்தபோன தன்மைபோலத்தான் இருப்பீர்கள். அது உண்மை ஆகிவிடாமல் இருக்க கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உயிர்த்துகள் என்பது மிகமிக நுண்ணியது, சக்தி வாய்ந்தது. அதற்குரிய மதிப்பளித்து செயல்படுவது முக்கியம். கொஞ்சம் பிசகினாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உடலுக்கே மீண்டும் திரும்புவதில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.

        எனவே, என்னைப்பொறுத்தவரை, இனிமேல் யாரும் ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' செய்யவேண்டியதும் இல்லை, அதை பழகிட வேண்டியதும் இல்லை' என்றே நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரில் கேட்கவும்.

வாழ்க வளமுடன்

-

Shall we learn the trick of one body to another body transformation and how?


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?

பதில்:

உங்கள் உடலைவிட்டு, இன்னொரு உடலுக்குப் போகும், தந்திரத்தில் இன்னும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை இந்த கேள்வி நிரூபிக்கிறது. சித்தாந்தம் என்ற வழியில் சித்து என்ற உயிரை அறிந்து, அதனுடைய மூலமும், இயக்கமும் உணர்ந்தவர்களான சித்தர்கள் இந்த ‘கூடுவிட்டு கூடுபாயும்’ வித்தையை கண்டுபிடித்து, உலகில் தாங்கள் வாழும் காலத்தில், அந்தந்த மக்களின் நன்மை கருதிமட்டுமே இதை செய்துவந்தார்கள். அதையே தங்கள் கவிதைகள் வழியாக சொல்லியும் வைத்தார்கள். ஆனால் செய்முறையை சொல்லவில்லை. அப்படியான செய்முறையை, நேரடியாக அந்த சித்தரின் வசமாக மட்டுமே கற்றுக்கொள்ளவும் முடியும். இந்தக்காலத்தில் யாருமே தங்களை சித்தர் என்று வெளிப்படையாக தங்களை, மக்களிடம் காட்டிக்கொள்வதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. என்றாலும் கூட, வாழும் சித்தர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், சில மனநலம் குன்றி, தெருவில் கவனமின்றி திரிவோரையும் ‘வாழும் சித்தர்கள்’ என்று நவீன மக்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கான, அக்கறையும், மருத்துவ உதவியும் செய்யாமல், செய்தும் தராமல், அவர்களின் தனிமையை, சுதந்திரத்தை கெடுத்து, மேலும் மேலும் அவர்களின் மனதை புண்ணாக்குகிறார்கள். காண்டண்ட் கிடைக்காத காணொளி பதிவர்கள் இதையும் பதிவாக்கி, யூயூபில் பரப்புகிறார்கள். கொடுமைதான்.

        இப்பொழுது கேள்விக்கு வரலாம். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியும்தான். ஆனால் அதற்கான அவசியம் என்ன? இதற்கான தக்க பதில் உங்களிடம் இருக்கிறதா? என்னவிதமான நன்மையை கருதி நீங்கள் இதை செயல்படுத்தப் போகிறீர்கள்? இதில் ஏதேனும் ரகசியமான ஆராய்ச்சி இருக்கிறதா? மக்களின் நலம் சார்ந்தோ, உலகின் எதிர்கால நன்மை கருதியோ திட்டத்தை நீங்கள் செயல்படுத்தப் போகிறீர்களா? இதற்கான விடையை முதலில் தயார் செய்யுங்கள். சுயநலம் கருதி இதை நீங்கள் செய்வதாக இருந்தால், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள், உயிரிழப்பு நேர்ந்துவிடும் என்பதும் உறுதி. தற்கொலைக்குச் சமமான காரியத்திற்கு ஒப்பாகிவிடும். ஏனென்றால் ‘இயற்கையின் செயல்விளைவு நீதி’ அத்தகையது.

        என்றாலும் உங்களுக்கான புரிதலை நான் தெளிவு செய்கிறேன். நீங்கள் அறிந்த ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை’ அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம் உங்களுக்குத் தெரியுமா? சொல்லுகிறேன்... 

நாம் ஓருடலாக வாழ்வதாக இருந்தாலும் கூட, இந்த உடல் மூன்று உடலாக அமைந்திருக்கிறது. 1) பருவுடல் 2) உயிருடல் 3) காரண உடல் ஆகியன ஆகும். பருவுடல் என்பது எலும்பு, தசை, சதை, ரத்தம், உடலுறுப்பு இவைகளால் ஆன மொத்த அமைப்பு. உயிருடல் என்பது பலகோடி உயிர்த்துகள் இணைந்த கண்ணாலும், கருவிகளாலும் காணமுடியாத, நுண்ணிய துகள்களால் ஆனதான் அமைப்பு. இதைத்தான் ‘சூக்குமம்’ என்றும் அழைக்கிறோம். அதையே சூக்கும உடல் என்றும் அழைக்கிறோம். மூன்றாவதாக இருப்பது, இந்த உயிரை, உடலுக்குள் கட்டிக்காக்கும் சக்தியான ‘காரண ஆற்றல் சக்தி’ இதையும் நாம் உணரமட்டுமே முடியும். இந்த மூன்றுக்கும் தனித்தனியான விரைவு இயக்கங்கள் உண்டு. அந்த தனித்தனியான இயக்கங்களை முறைப்படுத்தி ஒன்றுசேர்க்கவும் வேண்டும். இதில் அதிவேகமான விரைவுஇயக்கம் கொண்டது ‘காரண உடல்’ இதற்கு சமமாக ‘உயிருடல்’ பழகவேண்டும். இந்த இரண்டின் விரைவையும், இயக்கத்தையும் உடல் தாங்கிட பழகவேண்டும். இதற்கு நீண்டகால பயிற்சி முக்கியமானது ஆகும். யாரோ சொல்லக்கேட்டு, ஏதோ புத்தகம் வாசித்து, எவரோ காணொளியில் சொன்னதைக் கேட்டு செய்தால் அது ‘தற்கொலைக்கு’ சமமாகலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘சூக்கும பயணம்’ என்பது ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின்’ முன்னோட்டம் என்று சொல்லலாம். ஆனால், வேதாத்திரியத்தில் இந்த சூக்கும பயணம் பயிற்சி 1996 ம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. கைவிடப்பட்டது. ஏனென்றால், அதில் அன்பர்கள் ஏற்படுத்திக்கொண்ட கவனக்குறைவுதான் காரணமாக இருந்தது. எனவே, வேதாத்திரி மகரிஷி அவர்களே ‘இதுவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.

என்றாலும், வேதாத்திரியத்தில் வழங்கப்படும் ‘ஜீவகாந்த பெருக்கம்’ உங்களுக்கு சிறந்த மாற்றாக அமைந்திருக்கிறது. அது உங்களுக்கு உதவும்.
வாழ்க வளமுடன்
-

What is the easy way to understand the Vethathiriyam, if we feel as difficult?


வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


பதில்:

பொதுவாகவே கல்வி என்ற நிலையில் உள்ள எந்த உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். அவற்றை அனுபவமாக்கிக் கொள்ளும் பொழுது அவை முழுமையாக புரிந்துவிடும் என்பதே உண்மையாகும். எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும். அவரின் வயது, அனுபவம், கல்வி அறிவு, ஏற்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை அளவில் மாற்றம் பெற்றே இருக்கும். ஒருவருக்கு எளிமையாக இருப்பது, இன்னொருவருக்கு கடினமாக இருக்கும். இதனோடு ஆராய்ச்சிப் பார்வை, ஒத்துப்பார்த்தல், அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற தன்மைகளும் மாறுதலாகவே இருக்கும். எழும் சந்தேகங்களும், அதற்குறிய கேள்விகளும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.

        இதற்கெல்லாம் காரணம், அவர்களின் வயதும், அவர்களின் வாழ்க்கை சூழலும், ஏற்புத்திறனும், வாழ்வில் அவர்கள் கண்ட குடும்ப, சமூக, உலக வழக்க பழக்கங்களுமே ஆகும். எந்த வகையிலும் யாரையும் இங்கே குறை சொல்லுவதற்கு வாய்ப்பில்லை. பொதுவாகவே, என்னுடைய எல்லாவகையான பதிவுகளிலும், ‘நான் சொல்லுவது உங்களுக்கு புரிகிறதா?’ என்று முட்டாள்தனமாக கேட்பதே இல்லை. அது கேட்போரை கீழாக நினைத்து கேட்கக்கூடிய மனோநிலை என்பதை சில ‘விற்பனர்கள்’ புரிந்து கொள்வதில்லை. தன்னைமட்டுமே மேலாக நினைத்து, தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு நிலையில் இருப்பதுண்டு. ஒருவேளை ‘எனக்கு சுத்தமாக புரியவில்லை ஐயா’ என்று ஒருவர் எழுந்து கேட்டால், அந்த விற்பனரின் நிலை என்ன? மறுபடி முதலில் இருந்து பாடம் நடத்துவாரா? தனியாக கவனம் வைத்து பாடம் தருவாரா?

        வேதாத்திரியம் மிக எளிமையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேதாத்திரியத்தின் உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமானதும் அல்ல. வேதாத்திரியத்தை தந்த, வேதாத்திரி மகரிஷி ‘பாமர மக்களின் தத்துவஞானி’ என்றுதான் போற்றப்படுகிறார். அவரின் எழுத்துக்களும், கட்டுரைகளும், கவிகளும், பேச்சுக்களுமே சான்றாக இருக்கின்றது. அதை எடுத்துச் சொல்லுபவரும் அத்தகைய உண்மையை, தானாக புரிந்து கொண்ட பிறகு சொன்னால்தான், அது மற்றவர்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்கும். தனக்கே புரியாத ஒன்றை, பிறருக்கு பாடமாக, கல்வியாக தரமுடியுமா? எனவே இங்கே, ஒரு குறிப்பிட்ட உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புதிய ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றால், கற்றுக்கொடுப்பவர் நன்கு புரிந்து கொண்ட தன்மையில், அனுபவமானவராக இருக்கவேண்டியதும் அவசியம்.

        உங்களைப்போல, ஒரு தனிமனிதராகவே ஒவ்வொருவரும் இருப்பார். அவரவர்களுக்கு ஏற்றவகையில், தனித்தனி கவனம் கொண்டு உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும்  தரமுடியும் என்பதும் உண்மையே. பொதுவெளியிலும், கல்வி, பாட மையங்களிலும் அதை தரும் பொழுது, ஒரு பொதுவான நிலையில்தான் வழங்கமுடியும். அது எல்லோருடைய அறிவிற்கும் போய்ச்சேரும்படி ‘எளிமையாக’ இருக்கவேண்டியதும் அவசியமாகும். அனுபவமிக்க ஆசிரியர்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்பதும் உண்மையே. படித்ததை பேசுவதற்கும், உணர்ந்ததை பேசுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே?

        உங்களுக்கு இங்கே வழங்கப்படும் வழி, தீர்வு என்ன? என்றால் வேதாத்திரிய தத்துவத்தை மட்டுமல்ல, வேறு எந்த தத்துவமாக இருந்தாலும், அந்த வகுப்பில் உங்களுக்கு புரியவேண்டும் என்று நினைக்காதீர்கள். கல்வி பாடங்களை, விளக்கங்களை கேட்கும்பொழுது, குறிப்பு எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த வழி. உங்கள் சிறப்பான மூளையையும் காதுகளையும் மட்டுமே நம்புவது தவறு. சிந்தனைக் கவனம் சிதறிவிட்டால், அந்த விளக்கங்கள் உங்களின் இன்னொரு காதுவழியாக வெளியே ஓடுவிடும். அன்றைய பாடங்களை அன்றைக்கே, தனியாக அமர்ந்து, உங்கள் குறிப்புக்களோடு ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து பாருங்கள், எளிதாக புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

        கேள்வி நேரத்திலேயே, உங்கள் குறிப்பின் வழியாக, உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமானதை, சந்தேகத்தை கேள்வியாக கேட்டு பதில் பெற மறவாதீர்கள். ‘உங்களுக்கு புரிகிறதா?’ என்று ஆசிரியர் கேட்டால் ‘எனக்கு புரியவில்லை ஐயா’என்று உடனடியாக சொல்லிவிடுங்கள். பிறகு அந்த ஆசிரியரே உங்களுக்கு ஏற்றபடியாக தன்னை மாற்றுக்கொள்வார் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-

Why often noted yoga only is the best way? Any other way not truly work?


எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


பதில்:

யோகம்தான் சிறந்தது என்று சொல்லுபவர் உண்டுதான். ஆனால் அது அவர்களின் அனுபவம் சார்ந்த பதில் மட்டுமே. மெய்பொருள் உண்மை உணர்ந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகிய யாருமே யோகம் தான் சிறந்தது என்று சொல்லியதே இல்லை. சொல்லுவதும் இல்லை. ஆனால் ‘யோகம் ஒன்றுதான் முழுமையானது’என்று மட்டுமே சொல்லுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் எந்த நிலையிலும், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு சுலபமானதுதான் அது. எளிமையாக நீங்களாகக்கூட சிலவேளை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அது உணர்வாக நிலைக்காது. தொடராது. காட்சியாகாது. அதுதான் இங்கே உங்களுடைய கேள்வியில் தொக்கி நிற்கிறது. மற்றபடி யோகம்தான் சிறந்தது என்றோ, யோகம் மட்டுமே முழுமையானது என்று கூறுவதற்கில்லை. என்னுடைய இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொள்வோரும் உண்டு. அவர்கள் அவர்களின் அனுபவத்தில் இருந்து கருத்து சொல்கிறார்கள். நான் ஆராய்ச்சியின் வழியில் சொல்லுகிறேன்.

இதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வண்டியில் பூட்டிய மாடுகள், வயற்காட்டில் இருந்து விட்டிற்குச் செல்வதும், வீட்டிலிருந்து வயற்காட்டிற்குச் செல்வதும் தானாக நடக்கும். நீங்கள் அந்த மாடுகளை வழிநடத்த வேண்டியதில்லை. பழக்கபட்ட மாடுகள் தானாகவே வழி கண்டு நடந்து செல்லும். ஆனால் குதிரை அப்படியல்ல. என்னதான் பழக்கினாலும் அது தன் போக்கில்தான் நடந்து செல்லும், நடக்கும் என்பது கூட உண்மையல்ல, ஓடும் என்பதுதான்  உண்மை. மேலும் குதிரைக்கு அதன் பக்கவாட்டு பார்வையை மறைக்கவும் வேண்டும் அல்லவா? நீங்கள் அதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஆனாலும் இந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான மாடுகள், குதிரைகள் அருகிவிட்டன. இதில் மாடுகளுக்கும், குதிரைக்கும் இடையிலான ஆற்றல், வெளிப்பாடு, காலம், தூரம் கூட அடங்கி இருக்கின்றன அல்லவா? அந்த குதிரையை, அதன் இயல்பிலேயே பக்குவப்படுத்திவிட்டால் சிறப்புத்தானே? அதைத்தான் யோகம் தருகிறது.

ஒருவர் பக்தியில் ஈடுபாடு கொண்டவரா? அதிலும் பிரிவுகளில் நிற்கிறாரா? கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறாரா? எல்லாம் மறுத்து இயற்கையே என்ற முடிவில் இருக்கிறாரா? விஞ்ஞானம்தான் எல்லாவற்றிற்கும் விடை என்று கருதுகிறாரா? வேதாந்தத்தில் ஆர்வமாக இருக்கிறாரா? சித்தாந்தம் தான் எனக்கு என்று நினைக்கிறாரா? கர்மயோகமே எனக்கு போதும் என்று கருதுகிறாரா? வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒத்தும் உதவியும் வாழ்ந்தால் போதும் என்று விரும்புகிறாரா? மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருந்தாலே சரிதான் என்று நினைக்கிறாரா? இப்படி எந்த வகையினரும் மெய்ப்பொருள் உண்மையை ‘யோகம்’ ஒன்று இல்லாமல் அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உணர்ந்து கொள்ள, தனதாக்கிக் கொள்ள, முழுமையில் நிறைய ‘யோகம்’மட்டுமே துணை. இல்லையேல் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதைதான் உண்மையாகும்.

வாழ்க வளமுடன்

-

Why it is called by Vethathiriyam instead of Ashtanga yoga?


எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?

பதில்:

பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.

இப்போதும் கூட அஷ்டாங்க  யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். 
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.

ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு. 

அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.

வாழ்க வளமுடன்
-

Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

Why the social norms is never changes based on rich, poor and middle classes?


பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?


பதில்:

ஏதோ பொருளாதார நிபுணருக்கு அனுப்பிவைக்க வேண்டிய கேள்வியை என்னிடம் அனுப்பிவிட்டீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அவர்கள் மிக தெளிவான, துல்லியமான, உலகியல் நிலைப்படியும், தற்கால சூழ்நிலைப்படியும் புள்ளிவிபரங்களோடு கூடிய விரிவான பதிலை அவர்கள்தான் தரமுடியும். என்னளவில் பார்வைகளும் அனுபவங்களும் மாறும் என்பதே உண்மை. மேலும் யோகத்தில் ஆழ்ந்து அதில் பயணிப்பவர் பார்வை ஆழ்ந்து செல்லக்கூடியதுதான் என்றாலும், அக்கருத்தை சொல்லும் பொழுது, எதிர்தரப்பு எதிர்பாராத பதிலாக அமையும், அதனால் இவரிடம் போய் ஏனடா இதைக்கேட்டோம் என்று வருந்துமளவுக்கு, முகத்தினை திருப்பிக்கொள்ளும் அளவுக்கு, வேறொடு பிரச்சனை எழுமளவுக்கு இருக்கும். ஏதோ முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

பணக்காரன், ஏழை, நடுத்தரவர்க்கள் என்பதெல்லாம் விதி அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பணக்கார வீட்டில், பணக்காரனுக்கு மகனாக / மகளாக பிறந்ததால் மட்டுமே அவர் பணக்காரர் இல்லை. அவரின் வாழும் முறைதான் அந்த தகுதியை நிர்ணயிக்கிறது. ஒரு பணக்காரர் தீடீரென்று பணம், பொருள், சொத்து இழந்தும் விடுகிறார் அல்லவா? அதுபோலவே ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், அந்த சூழலை மாற்றிட உயர்ந்த படிப்பு படிக்க முயற்சிக்கலாம், அடிப்படை கல்வி போதுமென வேலைக்கு செல்லலாம். படிப்பே தேவையில்லை என்று திறமையை வைத்தும் உழைத்து முன்னேறலாம் அல்லவா? அடுத்ததாக, நடுத்தர வர்க்கமும் ஒரே வேலை, தொழில், பரம்பரை நிலை என்பதெல்லாம் மாற்றி, என்ன செய்தால், எப்படி செய்தால், உயரலாம், முன்னேறலாம், மேம்பாடு காணலாம் என்று சிந்தித்து, ஆராய்ந்து தகுந்த காலத்தில் நல்ல நிலையை அடையலாம் அல்லவா?

இப்படியான நிலை இருக்கும் பொழுது பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லுவது முறையாகாது. அவரவர் அளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், வெளியில் தெரியாது. நீங்கள் ஒரு பணக்காரனாக இருந்தால் இந்த கேள்வியே கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. ஏழையும், நடுத்தரவர்க்கமும் தான் இப்படியான புலம்பலிலும், சிக்கலிலும் இருக்கிறார்கள். பணக்கார்களை நீங்கள் நுணுகி பார்க்கவேண்டும். அவர்களிடம் பொதுவாகவே, அநாவசிய செலவு என்று இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அளவு வைத்துக்கொள்வார்கள். திட்டமிடுவார்கள். லாபமும், வருமானமும் வருமா? என்று சிந்தித்துத்தான் ஒன்றை தொடங்குவார்கள். இழப்பை சிறிதளவும் ஏற்க மாட்டார்கள். தானமாக கொடுத்தாலும் அதில் ஓர் அளவும் கணக்கும் இருக்கும். இத்தகைய குணங்கள் ஏழையிடமும், நடுத்தரவர்கத்திடமும் உண்டா?

இன்றைக்கு இருக்கு, நாளை என்பதை நாளைக்குப் பார்க்கலாம் என்றுதான் ஏழையும், நடுத்தரவர்க்கமும் இருக்கும். தன்னிடம் இருப்பதை வாறி இறைக்கும் மனநிலையோடுதான் இருப்பார்கள். அது நல்ல உயர்ந்த நிலைதான் ஆனால், நீங்கள் தன்னளவில் ஏன் கஷ்டத்தை ஏற்கவேண்டும்? அப்படியான அவசியம் என்ன? அவரெல்லாம் உழைக்காமலேயே சம்பாதிக்கிறான், நான் இப்படியாக அவதிப்பட வேண்டியுள்ளது என்று மற்றவரை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்? இது உதாரணங்களே! இதுபோல இன்னும் நிறை பேசிக்கொண்டே. எழுதிக்கொண்டே போகலாம்.

ஏழைகளும், நடுத்தரவர்க்கமும் உழைக்கத் தயாரானவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மற்றவர்களுக்கு உதவும் மனநிலையும், பிறருக்காக வருந்தும் மனநிலையும் பெற்றவர்கள். ஆனால் தன்னளவில் தன்னை உயர்த்திட ஏனோ தயங்குகிறார்கள். அதை மாற்றி வாழ்வில், தொழிலில், வேலையில், வியாபாரத்தில், உழைப்பில் வெற்றி பெற்று, பொருளும் செல்வமும் பெறவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஐயா, என்னளவில் எனக்குத் தெரிந்த கருத்தைத்தான் முன்வைத்திருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு. நான் தீர்வு தந்தாக என்னிடம் வாளை சுழற்றவேண்டாம். வாள் சண்டைக்கு நான் தயாரில்லை. கருத்துக்களில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விலகிக் கொள்ளுங்கள். தவறு இருக்குமானால் நானே திருத்திக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.

வாழ்க வளமுடன்

-